திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய குழுவினர்!
திருகோணமலை புறா தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் ஒரு குழுவினர் தொடர்பில் தகவலைகளை சமூக ஊடகம் ஒன்று வெளிபடுத்தியுள்ளது.
இலங்கையின் அழகிய இடமாக விளங்கும் திருகோணமலை புறா தீவிற்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாப் பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்த தகவல்கள் ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளது.
விடுமுறையை கழிக்க வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த 20 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்று அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்பட்டாலும், படகு சவாரி, நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கஷ்டத்துடன் உபகரணங்களைப் பயன்படுத்தியவர்கள் அதனைத் திருப்பிக் கொடுக்கும் போது மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர்.
குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து இவ்வாறு அதிக பணம் கேட்டுள்ளனர்.
ஆனால், சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர், சுற்றுலா பயணிகளை பொல்லுகளால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் கூட இதன்போது தாக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டிய நேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் இவ்வாறான நிலையை எதிர்கொள்வது கவலைக்குரிய விடயமாகும்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.