ரவுடிகள் அட்டகாசம்; கேள்விக்குறியாகும் யாழ் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதுபோதையில் வந்த நபர், வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.
இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
அதேவேளை அண்மைக்காலமாக வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந் நிலையில் வைத்தியசாலை சேவையை தொடர்ந்து முன்கொண்டு செல்வது சவாலுக்குரியது என வைத்தியசாலை ஊழியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.