இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த முறைப்பாடு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவத்தில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, நீதவான் இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார். அதனுடன், அன்றைய தினம் வழக்கின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.