வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கொட்டி தீர்க்கப்போகும் மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது வீழும் மழை, எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது காணப்படும் மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும். இதனால் நண்பகல் நேரங்களில் கடும் வெப்பநிலை நிலவும், பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் மழை ஏற்படும்.
மேலும், இவ்வாறு உருவாகும் மழை இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடியதாக இருக்கும். குறிப்பாக, இடி மின்னல் நிகழ்வுகளின் போதான மின்னேற்றம் முகில்களுக்கும் புவி மேற்பரப்பிற்கும் இடையில் நேரடியாக பரிமாற்றம் நடைபெறுவதால் இது ‘குத்தான இடி மின்னல்’ (Cloud-to-Ground Lightning) ஆக இருக்கும். இது மிகவும் ஆபத்தான வகையான இடி மின்னலாகும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும், எதிர்வரும் 10 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாகவும், இது இவ்வாண்டு சித்திரைத் குழப்பத்தின் (சிறிய பருவநிலை மாற்றத்தின்) ஆரம்பப்புள்ளியாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அதிக அளவில் மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் தென்மேற்குப் பருவக்காற்று (Southwest Monsoon) மே மாத இறுதியில் ஆரம்பிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
எனவே, இந்த காலப்பகுதியில் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.