தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் சிறுவன் கைது
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் சிறுவன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்று (06) பகல் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோதே சிறுவனின் உடைமையில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்களை சிறுவன் வீசியுள்ளார்.
இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரள கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.