இளமை காலத்தில் போப் எழுதிய காதல் கடிதம் !

உலக கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப்பான போப் பிரான்சிஸ் நேற்று (வயது 88) உடல்நலக்குறைவால் நித்திய இளைப்பாறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், தென் அமெரிக்காவிலிருந்து போப்பான முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது இளமைக் காலத்திலான ஒரு காதல் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 12 வயதில், பியூனஸ் அயர்ஸில் அவர் வாழ்ந்தபோது பக்கத்துவீட்டு பெண்ணான அமாலியா டாமோண்டை காதலித்துள்ளார். அந்த நேரத்தில் அவர் எழுதிய காதல் கடிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்ஜ் தனது காதலை அமாலியாவிடம் நேரடியாக வெளிப்படுத்தி, திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னாளில் அமாலியா அளித்த ஒரு நேர்காணலில், “அவன், ‘நீ என்னை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாவிட்டால், நான் பாதிரியாகி விடுவேன்’ என்று சொன்னான். அவன் மிகவும் அற்புதமான பையன்,” என பகிர்ந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு அமாலியாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உறவு முறிந்தது. பின்னர், ஜார்ஜ் கிறிஸ்தவ சேவைக்குள் நுழைந்து பாதிரியாகி, போப்பாக மாறியவர்தான்.
ஆனால், ஆண்டுகள் கழிந்தும் இருவரிடையே மரியாதையான நட்பு தொடர்ந்ததுடன், அவ்வப்போது கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனர். “நல்லவேளை, நான் அவனுக்கு ஓகே சொல்லவில்லை” என அமாலியா நகைச்சுவையாக கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.