மஹிந்தவின் அரசியலை நொடிப் பொழுதில் அழித்த நாமல்! ரணிலை நோக்கி வரும் மொட்டின் இதழ்கள்

மஹிந்த மிக திட்டமிட்டே அரசியலில் கால் வைத்தார். சந்திரிகாவின் தந்தையான பண்டாரநாயக்கவோடு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய மஹிந்தவின் தந்தையான டி. ஏ. ராசபக்சவினால், சிறிமாவோ குடும்பத்துக்குள் ஊடுருவி, பண்டாரநாயக்க – சிறிமாவோ வாரிசான அநுர பண்டாரநாயக்கவோடு நட்பாகி, அவரை அரசியலில் செல்லாக் காசாக்கி, சந்திரிகா உதவியோடு பிரதமராகி, சந்திரிகாவையே செல்லாக் காசாக்கி ஜனாதிபதியானவர்தான் மஹிந்த ராஜபக்ஷ.
மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் தின்று கொட்டை போட்டவர் என்றால் மிகையாகாது. ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் நண்பர்கள்தான்.
ஆனால் தனது அரசியலுக்கு ஆபத்து வரும் என்றால், நண்பன் அல்ல ஆண்டவனையும் இல்லாதொழிக்க தயங்காதவர் மஹிந்த ராஜபக்ஷ.
அப்படித்தான் புலிகளுக்கு பணம் கொடுத்து, 2005ல் தேர்தலில் ரணிலை தோல்வி அடைய வைத்தார். 2005ல் தேர்தல் கால பேரத்தை புலிகள் முதலில் பேசியது ரணில் தரப்போடுதான்.
புலிகளது தேவையை நிறைவேற்ற பல பணம் படைத்த வியாபாரிகள் முன்வந்த போதும், அது தவறானது என ரணில் நிராகரித்தார்.
இது ரணில் செய்த பெரும் பிழை. சுயநிர்ணய உரிமை போல, நோர்வே ஆதரவோடு தான் புலிகளோடு ஒப்பந்தம் ஒன்றை ஜனாதிபதி சந்திரிகாவை மீறி செய்திருப்பதால், புலிகள் தனக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு சொல்வார்கள் என ரணில் நம்பினார்.
புலிகளது கனவு சுயநிர்ணய உரிமை அல்ல, தனிநாடு. ரணில் ஜனாதிபதியானால், தமிழீழ தாயக கனவு கலைந்து போகும். ரணில் அடிபட மாட்டார், பேச்சு வார்த்தை நடத்தியே போராட்டக் குணத்தை மழுங்கடித்து விடுவார் என நினைத்தனர்.
தமக்கு தேவை சண்டை போடும் ஒருவர். அதற்கு சரியாக பணமும் கொடுத்து, அடிபடக் கூடிய ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ மாட்டினார்.
பிரபாகரனது பார்வையில் யதார்த்தவாதியாக தெரிந்த மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைக்க, தமிழர் வாக்குகளை கடைசி நேரத்தில் பகிஸ்கரிக்க பரப்புரை செய்யப்பட்டது.