இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்தியாவை எச்சரிக்கும் தமிழக முதல்வர்!

இந்தியக் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக அரசாங்கம் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.
இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin) எச்சரித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2022, நவம்பர் 16-ம் திகதி 14 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் இயந்திர படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள், அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதும், அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும், படகுகளை இலங்கை கடற்படை சேதப்படுத்துவதும், மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டதாக ஸ்டாலின் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழகத்தின 100 படகுகள் இலங்கை வசம் உள்ளன என்பதையும் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.