போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கட்டடம் நிர்மாணிப்பதில் முரண்பாடு ; தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் கைது
![கட்டடம் நிர்மாணிப்பதில் முரண்பாடு ; தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் கைது](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/8.jpg)
அம்பாறையில் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியினையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றினை நிர்மாணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகின்றது என குறிப்பிட்டு அருகில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்கின்ற 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞனை நகைக்கடை உரிமையாளர் தனது குழுவினரை கொண்டு தாக்கியுள்ளார்.
தாக்குதலில், காயமடைந்த இளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் தாக்குதலில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் என கூறப்படுபவரும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சந்தேகநபரான நகைக்கடை உரிமையாளரின் நிலைமை பாரதூரமாக இல்லாத போதிலும் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அவரின் உறவினரான வைத்தியர் கடந்த கால காய நிலைமையை காட்டி கல்முனை தலைமையக பொலிஸாரின் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் நேற்று மாலை இளைஞனை தாக்கிய நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் கைதான சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.