பசு மாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது! ஊர்காவற்றுறையில் சம்பவம்
![பசு மாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது! ஊர்காவற்றுறையில் சம்பவம்](http://itamilnews.com/wp-content/uploads/2024/07/18-8.jpg)
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை உட்பட தீவகத்தின் பல இடங்களிலும் அனுமதி அற்ற முறையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் மற்றும் மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக பசு மாடுகள் இறைச்சிக்காக வெட்டும் பாதகச் செயலும் அரங்கேறி வருகின்றது.
பல வருடங்களாக இடம்பெறும் இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த முடியாமைக்கு காரணம் இவ்வாறு இறைச்சி வெட்டுபவர்கள் தடுக்க வருபவர்களுக்கு இலஞ்சம் வழங்குகின்றனர் எனவும் இதனால் அவர்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி த.சுசிதரன் தலைமையிலான குழுவினர் மேற்படி மாடு வெட்டியவரைக் கைது செய்துள்ளனர்.
நிகழ்வொன்றுக்காக தாம் மாட்டை வெட்டியதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார். எனினும் மாடு வெட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.
குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன் அவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
இதேவேளை, சட்டவிரோதமாக மாடு வெட்டுவது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.