பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமில் பிரதமர் மஹிந்த
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், 136 வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ராணுவ ஆட்சி வராது என்றும் அதற்கான அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.