போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விளையாட்டு சட்டத்தில் திடீர் மாற்றம்!
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களில் முன்னிலையாக முடியாத வகையில் விளையாட்டு சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவான வர்த்தமானி அறிவித்தல், விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. நபர் ஒருவர் விளையாட்டு சங்கத்தின் அதிகாரியாகவோ அல்லது உறுப்பினராகவோ பதவி வகிக்கக்கூடிய உச்சபட்ச வயதெல்லை 70 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், தேசிய விளையாட்டு சங்கங்களில், தலா 4 ஆண்டுகள் என்ற அடிப்படையில், இரண்டு தடவைகள் தலைமைப் பதவி வகித்திருந்த ஒருவரை, மீளவும் தலைவர் பதவிக்கு நியமிக்க முடியாது என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அது, குழுவின் உறுப்பினராக பதவியில் நீடிக்க தடையாக அமையாது என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நான்கு தடவைகளுக்கு, தலா இரண்டு ஆண்டுகள் என்ற பதவி காலத்தை, அதாவது 8 ஆண்டுகள் தேசிய சங்கத்தில் பதவி வகித்திருந்தவர், மீளவும் தெரிவுசெய்யப்படுவதற்கு பொறுத்தமற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த உத்தரவு அமுலாகும் காலத்தில், தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ள தலைவர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள், தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள பதவி காலம் நிறைவடையும் வரையில், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.