லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: மனைவியின் தங்கையுடன் ஓடிய நபர்! இலங்கையில் சம்பவம்

லொட்டரி சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டத்தை அடுத்து தன்னுடைய மனைவியின் தங்கையுடன், முடி திருத்துனர் ஒருவர் ஓடிய சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கண்டி நகரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திலே இருக்கும் கலஹா நகரத்திலேயே இடம்பெற்றுள்ளது.
கண்டி – கலஹா நகரத்தில் சலூன் வைத்திருக்கும் சுமார் 45 வயதான முடி திருத்துனர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பல வகையான அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வனவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
அவ்வாறு கொள்வனவு செய்த ஐந்து லொட்டரி சீட்டுகளில் சுமார் 5 இலட்சம் ரூபாய் அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது.
வெளிநபர்களின் காதுகளுக்கு இந்த செய்தி கிட்டவில்லை. இருப்பினும், அவருடைய உறவினர்கள் வீட்டுக்குத் தேடிவந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு வாழ்த்துச் சொல்ல வந்த மனைவியின் தங்கையும், தங்கையின் இரண்டு பிள்ளைகளும் இரண்டொரு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மனைவியின் ஆலோசனையின் பிரகாரமே அவர்கள் அவ்வீட்டில் தங்கியுள்ளனர்.
அன்றையதினம் அதிகாலையில் எழுந்த அவ்விரு பிள்ளைகளும் தாயை தேடி அழுதுள்ளனர். முடித்திருத்துனரின் மனைவி, தன்னுடைய தங்கையை வீடு முழுவதும் தேடியுள்ளார் இருப்பினும் தங்கையை காணவில்லை.
இதுதொடர்பில் தன்னுடைய கணவனிடம் தெரியப்படுத்துவதற்காக கணவனை வீட்டிலுள்ள பல அறைகளிலும் தேடியுள்ளார். கணவனையும் காணவில்லை. அதன்பின்னரே முடித்திருத்துனரின் மனைவி விளங்கிக்கொண்டுள்ளார்.