போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நடுவானில் நேரவிருந்த பாரிய அசம்பாவிதம்: நூலிலையில் தவிர்க்கப்பட்ட விபத்து!
விமான நிலையத்தில் தரையிறங்க வந்து கொண்டிருந்த இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில் நூலிலையில் விபத்து தவிர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் நேபாள ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு பயணிகள் விமானங்கள் விபத்துக்குள்ளாகவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19,000 அடி உயரத்தில் பயணித்து கொண்டிருந்த இந்திய விமானம், திடீரென கீழே இறங்க ஆரம்பித்து, 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த நேபாள விமானத்தின் மீது மோதவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விமானங்களின் பாதுகாப்பு அமைப்புகள் சமிக்ஞை வழங்கியதால் விமானிகள் விபத்தைத் தவிர்க்க முடிந்தது.
இந்திய விமானம் ஏன் திடீரென கீழே இறங்கியது என்பது தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, நேபாளத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறையின் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்திய விமானம் எதிர்பாராதவிதமாக ஏன் தரையிறங்கியது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய விமானத்தின் விமானியின் தவறால் இது நடந்ததா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருந்து காத்மாண்டு விமான நிலையத்திற்கு இந்திய விமானம் வந்து கொண்டிருந்தது.
அதேவேளை, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேபாள விமானம் வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.